வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல்: முதியவர் கைது

திருநின்றவூர்: ஆவடி அடுத்த திருநின்றவூர், அருந்ததிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி  விற்பதாக திருநின்றவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று விரைந்து சென்றனர். மேட்டுத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக  நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, அங்கு 2 பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பிறகு, அங்கிருந்த 15 கிலோ எடை உடைய கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், அங்கிருந்த கண்ணையா (61) என்பவரையும் போலீசார் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதில், திருநின்றவூரை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி நாதனின் மருமகள் ஜெயந்தி (28) ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி உள்ளிட்ட இடங்களுக்கு பொட்டலங்களாக சப்ளை செய்ததும் தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடந்தையாக இருந்த கண்ணையாவை கைது செய்தனர்.

Related Stories: