சென்னை: ஹத்ராஸ் சம்பவத்தை மூடி மறைக்க அரசு முயற்சிப்பதாக கனிமொழி குற்றம் சாட்டினார். திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடியிலிருந்து நேற்று மதியம் விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் கனிமொழி கூறியதாவது: மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து அவர்களுக்கு புரியாத மொழியை திணித்து வருகிறது. இந்தியை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலையை கட்டாயமாக்குகிறது. ரயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தால் வரும் குறுந்தகவல் கூட இந்தியில் தான் வருகிறது. இதனால் குறுந்தகவலில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை கூட மக்களால் படிக்க முடியாது. மத்திய அரசு குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் இந்தியை புகுத்துவதையே தொடர்ந்து செய்வது மோசமான விளைவுகளை உருவாக்கும்.