அக்டோபர் 5ம் தேதி முதல் ஐகோர்ட்டில் நேரடி விசாரணை: மேலும் 2 நீதிபதிகள் ஒப்புதல்

சென்னை: அக்டோபர் 5ம் தேதி முதல் உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்த மேலும் இரண்டு நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25 முதல் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள்  மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளில் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டு  வருகின்றன.உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் புதுச்சேரி தவிர அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு  நடைமுறைகளை கடைபிடித்து நேரடி விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் நேரடியாக வழக்குகளை விசாரிக்க ஒப்புதல்  அளித்துள்ளனர். இது குறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் (நிர்வாகம்) இந்துமதி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா  சுமந்த் ஆகியோர் அக்டோபர் 5ம் தேதி முதல் வழக்குகளை நீதிமன்றங்களில் அமர்ந்து நேரடியாக விசாரிக்க உள்ளனர்.

வழக்குகள் உள்ள வக்கீல்கள் மற்றும் பார்ட்டி இன் பேர்சன் ஆகியோர் ஆவின் கேட் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் வரும் நுழைவு வாயில் வழியாக  உரிய வழக்கு ஆவணங்களுடன் வரலாம். இவர்கள் தங்களது வாகனங்களை எம்.பி.ஏ பார்க்கிங் மற்றும் குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில்  நிறுத்தலாம்.வக்கீல் குமாஸ்தாக்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வர அனுமதி இல்லை. வக்கீல்கள் அறைகள், நூலகங்கள் தொடர்ந்து  மூடப்பட்டிருக்கும். உயர் நீதிமன்ற ஊழியர்கள் கேன்டீன் மட்டும் முழு நேரமும் திறந்திருக்கும்.வழக்கு உள்ள வக்கீல்கள் சம்மந்தப்பட்ட நீதிமன்றம் அருகில் வழக்கு விசாரணைக்கு அழைப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். நீதிமன்ற  வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் கைகழுவ வேண்டும். உள்ளே வரும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை  செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: