திருத்தணி அருகே புதரில் வாலிபர் சடலம் மீட்பு

திருத்தணி: திருத்தணி அருகே நேற்று காலை ஒரு சரக்கு ஆட்டோ அருகே புதரில்  ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தார். திருத்தணி அருகே கனகம்மாசத்திரம்-திருவாலங்காடு கூட்டு சாலையில், காவேரிராஜபுரம் கிராமப் பகுதியில் நேற்று காலை ஆந்திர மாநில பதிவெண் கொண்ட சரக்கு ஆட்டோ ஒன்று அனாதையாக நின்றிருந்தது. அதன் அருகே புதரில் வாயில் நுரை தள்ளிய நிலையில் ஒரு வாலிபரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து காவேரிராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு இறந்து கிடந்த வாலிபர் கட்டம் போட்ட சட்டை, சிமென்ட் கலர் பேண்ட் அணிந்திருந்தார்.  சுமார் 40 வயது இருக்கும். போலீசார் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவருக்கு யாராவது விஷம் கொடுத்து கொன்றார்களா அல்லது தற்கொலை செய்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Related Stories: