தஞ்சாவூர்: பிரதமர் கிசான் நிதி முறைகேட்டில் காவல்துறை உதவியோடு இதுவரை 72 கோடி ரூபாய் மீட்கப்பட்டு வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாக அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 3 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 3 சம தவணைகளில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. திட்ட வழிகாட்டுதல்களின்படி தகுதியான விவசாயிகள் கண்டறியப்பட்டு இந்த திட்டத்தின் நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் விவசாயி அல்லாதோரும் நிதியுதவி பெற்றிருப்பது ஆய்வில் அம்பலமானது. இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் வசம் சென்றது. இதை தொடர்ந்து முறைகேடாக பணம் பெற்றவர்களிடமிருந்து மீண்டும் அந்த தொகையானது திரும்ப பெறப்பட்டு வருகிறது. இவ்வாறு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம் என பல மாவட்டங்களில் கோடிக்கணக்கான பணம் மீண்டும் அரசு கணக்கில் வைப்பு வைக்கப்பட்டு வருகிறது.