சென்னை: சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவை தொகையான ரூ.4,321 கோடியை மத்திய அரசு விரைவில் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். 2017-18ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவை தொகையினை வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள் அடங்கிய குழு கூட்டம், பீகார் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி தலைமையில் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி இந்த கூட்டத்தில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர் திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், வணிக வரி ஆணையர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.