சண்டிகர் : மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 3 வேளான் திருத்த மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இது, அக்டோபர் 1ம் தேதி வரை வார விடுப்பின்றி, 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதன் முதல் நாளான்று விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றை விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இந்த 3 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.