மிளகாய் பொடி தூவி பறித்தனர் ரூ.2 கோடி வைர நகை கொள்ளையில் 5 பேர் கைது

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆசாரங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (45). இவர் தனக்கு சொந்தமான வைர கற்கள் பதித்த 4 மோதிரத்தை (52.6 கிராம்) விற்பனை செய்வதற்காக நண்பர்கள் ராவணன், வழக்கறிஞர் பிரகலாதன் ஆகியோருடன் காரில் கடந்த 13ம் தேதி கூட்டேரிப்பட்டு பகுதிக்கு சென்றார். அங்கு சென்னையை சேர்ந்த புரோக்கர் அருள்முருகன், செந்தில் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களுடன் காரில் கூட்டேரிப்பட்டு- தீவனூர் சாலையில் சென்றார். கோபாலபுரம் என்ற இடத்தில் வந்தபோது காரை மடக்கி வழிமறித்த 10 பேர் கொண்ட மர்மகும்பல், மிளகாய் பொடி தூவி கத்திமுனையில் கருணாநிதியிடம் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நான்கு வைர மோதிரங்களை பறித்துக்கொண்டு தப்பியது.

இது சம்பந்தமாக புரோக்கர் அருள்முருகன், செந்தில் ஆகியோரிடம் மயிலம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் அருள்முருகன், செந்தில் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி விவரங்களை சேகரித்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக தீவனூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் மகன் பரந்தாமன் (29), அவரது உறவினர் ஆந்திர மாநிலம் சித்தூர் தனியார் பி.எட் கல்லூரி பேராசிரியர் மணிகண்டன் (31), இன்ஜினியர் அருள் முருகன் (24), சித்தூரை சேர்ந்த டிரைவர் மகேஷ் (21), விஜயசேகர் (31) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Related Stories: