ஆன்லைனில் சூதாட்டம் சூபர்வைசர் தற்கொலை

புழல்: ஆன்லைன் சூதாட்டத்தில் பணமிழந்த சூபர்வைசர் தற்கொலை செய்துகொண்டார். செங்குன்றம் அண்ணா தெருவை சேர்ந்தவர் தினேஷ்(27). இவரது மனைவி சரண்யா (25). தினேஷ் புழல் அடுத்த சூரப்பட்டில் உள்ள தனியார் குடோனில் சூபர்வைசராக பணியாற்றி வந்தார். மேலும், இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால் நிறைய பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இதனை சரிசெய்ய பலரிடம் கடன் வாங்கியும் உள்ளார். இந்நிலையில், கடனை கொடுத்தவர்கள் அவரை வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்குமாறு கேட்டனர். ஆனால், தினேஷால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த இவர் நேற்று படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அவருடைய மனைவி சரண்யா அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சரண்யா தற்போது 4 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: