அரசு மருத்துவமனைகளில் 1,31,352 பேருக்கு புற்றுநோய் சார்ந்த சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சார்ந்த மருத்துவ சேவைக்காக இதுவரை 1,31,352 பேர் சிகிச்சை பெற்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 48,647 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.

2,191 பேருக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 27,721 பேருக்கு கீமோதெரபியும், 11,678 பேருக்கு கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்பட்டது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 250 புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்திலும் தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தொற்று காலத்திலும் புற்றுநோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் தங்கு தடையின்றி வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்ச் 2020 முதல் இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 352 நபர்கள் புற்றுநோய் சார்ந்த மருத்துவ சேவைக்காக வெளிப்புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். 6,664 நபர்களுக்கு வலி மற்றும் நிவாரண மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 250 புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் புற்றுநோயாளிகள் சிகிச்சையை இடைவிடாமல் தொடர்வதற்காக தமிழ்நாடு அரசின் 102 வாகன சேவை மூலம் புற்றுநோயாளிகளின் வீடுகளிலிருந்து மருத்துவமனைக்கும், சிகிச்சை முடிந்த பின்பு மீண்டும் அவர்களின் வீடுகளிலும் கொண்டு சேர்க்கப்பட்டனர். இவ்வாகன சேவையின் மூலம் மார்ச் 2020 முதல் இதுவரை 1,396 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: