பள்ளிப்பட்டு: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராமமக்களுக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மேற்கு மலை பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு அணையிலிருந்து 600 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கொடுத்து ஓடுகிறது.