கம்பம்: கொரோ னா பரவலை கட்டுப்படுத்த தேனி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள் கடந்த மே 5ம் தேதி முதல் கம்பம் மெட்டு வழியாக மட்டுமே சென்று வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கேரளாவிற்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டுமே கம்பம் மெட்டு வழியாக அனுப்பப்பட்டது. பயணியர் வாகனங்கள் இ- பாஸ் பெற்று குமுளி வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. கம்பம்மெட்டு வழியாக கட்டப்பனை, குட்டிக்கானம் செல்வதால் 30 கிமீ சுற்றி வருவதுடன் குறிப்பிட்ட நேரத்தில் சரக்குகளை கொண்டு சேர்க்க முடிவதில்லை. தவிர கம்பமெட்டை அடுத்துள்ள மந்தி பாறை ஏற்றத்தில் சரக்கு வாகனங்கள் ஏறி செல்ல முடியாமல் திணறுகின்றன. மேலும் கம்பம்மெட்டு என்பது ஒரு வழிப்பாதையாக மிக குறுகலான ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய அளவு உள்ளது. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன. அதேநேரம் குமுளி சாலை, இரு வழிச்சாலை என்பதால் வேகமாக கேரளா சென்று திரும்பி வரலாம்.