கொரோனா விழிப்புணர்வுக்காக தஞ்சையில் இருந்து சென்னைக்கு டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்

மயிலாடுதுறை: கொரோனா விழிப்புணர்வுக்காக தஞ்சையில் இருந்து சென்னைக்கு டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

தமிழக தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தஞ்சையில் இருந்து சென்னைக்கு சைக்கிள் பயணம் புறப்பட்டார். தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா, திருவாரூர் மாவட்ட அலுவலர் அனுசுயா, கடலூர் மாவட்ட அலுவலர் ராபின்கேஸ்ட்ரா உட்பட 50 வீரர்களும் அவருடன் செல்கின்றனர். இக்குழுவினர் மயிலாடுதுறை வருகை தந்தபோது அவர்களுக்கு எஸ்பி ஸ்ரீநாதா வரவேற்பளித்தார். பின்னர் சைலேந்திரபாபு மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் சைலேந்திரபாபு கூறுகையில், தீயணைப்பு வீரர்கள் உடல் உறுதியாக இருந்தால் தான் மீட்பு பணிகளில் ஈடுபட முடியும். 24 மணி நேரமும் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதை வலியுறுத்தியும், கொரோனா விழிப்புணர்வுக்காகவும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளேன். சென்னை ெசல்லும் வழியில் 14 தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு செய்ய உள்ளேன் என்றார். பின்னர் குழுவினர் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி நோக்கி புறப்பட்டு சென்றனர். சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, மரக்காணம் வழியாக 335 கிமீ தூரம் கடந்து இன்று மதியம் சென்னை செல்கின்றனர்.

Related Stories: