கழுகுமலை: கழுகுமலை பகுதியில் கடந்த 3 மாத காலமாக வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. இதனால் மதிய நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர். வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல வெயில் அடித்தது. ஆனால் மாலை 4 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. கழுகுமலை நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியிலும் மழை பெய்த காரணத்தினால் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் இருக்கும் குமார தெப்பத்தில் உள்ள பசுவாய் வழியாக மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.