கடிதம் வந்ததாக கூறும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், ஏஐசிடிஇ-க்கு என்ன பதில் கடிதம் எழுதினார்? அமைச்சர் அன்பழகன் கேள்வி

சென்னை: கடிதம் வந்ததாக கூறும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஏஐசிடிஇ-க்கு என்ன பதில் கடிதம் எழுதினார்? என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சியடைய செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்பு, பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக கருதப்படுகின்ற ஏ.ஐ.சி.டி.ஐ. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில் தமிழக அரசு எடுத்துள்ள அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை ஏற்க இயலாது என்று தெரிவித்திருந்ததாகவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் கருத்தை ஏஐசிடிஇ கருத்தாக திணிப்பது கண்டனத்திற்குரியது என்றும், ஏஐசிடிஇ மின்னஞ்சல் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஏஐசிடிஇ சார்பில் அரியர் தேர்வுகள் தொடர்பாக தமிழக அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை. யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ விதிகளை தமிழக அரசு முழுமையாக பின்பற்றும். அரியர் தேர்வுகளுக்கு தமிழக அரசு விலக்கு அளித்தது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரத்திற்கு எந்தவித கோரிக்கை முன் வைத்தார்கள் என்பது தொடர்பாக விளக்கத்தை அண்ணா பல்கலைக்கழகம் தான் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: