சென்னை: கடிதம் வந்ததாக கூறும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஏஐசிடிஇ-க்கு என்ன பதில் கடிதம் எழுதினார்? என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சியடைய செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்பு, பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக கருதப்படுகின்ற ஏ.ஐ.சி.டி.ஐ. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில் தமிழக அரசு எடுத்துள்ள அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை ஏற்க இயலாது என்று தெரிவித்திருந்ததாகவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது.