நெல்லை: பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக மூடப்பட்ட டவுன் குற்றால ரோடு, தினகரன் செய்தி எதிரொலியாக ஒரு வழிப்பாதையாக திறக்கப்பட்டு உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.நெல்லை மாநகர பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக டவுன் வழுக்கோடை சந்திப்பில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலான குற்றால ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. தொடர்ந்து குற்றால ரோட்டில் இருந்து வடக்கு, தெற்காக செல்லும் தெருக்களில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே தொண்டர் சன்னதி பகுதியில் இருந்து பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக வழுக்கோடை சந்திப்பில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலான பகுதிகள் மூடப்பட்டுள்ளன. அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தெருக்களில் இருந்தும் மக்கள் அவசர தேவைக்கு இருசக்கர வாகனங்களில் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கடும் சிரமத்திற்குள்ளாயினர். இதுகுறித்து நேற்று தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.