புதுடெல்லி: ரிசர்வ் வங்கி அறிவித்த 6 மாத கடன் தவணை சலுகை இன்றுடன் முடிகிறது. இது மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 2 நாட்களில், பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதில், கொரோனாவால் வேலையிழப்பு, வருவாய் சரிவு போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில், கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த பரிந்துரை பொருந்தும்.