ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: காவல்துறை தரப்பில் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்...!!!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையை துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. ஏற்கனவே 3 நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில்  தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில் ஒரு தீவிரவாதி சரணடைந்தார். இதற்கிடையே ஸ்ரீநகர் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று அதிரடியாக நுழைந்து போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் தேடுதலில் ஈடுபட்டபோது அங்கிருந்த தீவிரவாதிகள் போலீஸாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர் இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் போலீஸ் தரப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீநகரில் உள்ள பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா கூறுகையில், “ தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். போலீஸ் தரப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் இருந்து 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 3 கைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன” எனத் தெரிவித்தார்.

Related Stories: