தமிழ்நாடு வக்பு வாரியம் கலைக்கப்பட்ட விவகாரம்: உயர் நீதிமன்ற ஆணை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி 2017ல் தேர்தல் மூலம் 6 பேரும், நியமனம் மூலம் 4 பேரும் உறுப்பினராயினர். பார் கவுன்சில் உறுப்பினர்கள் இல்லாததால், இரு மூத்த வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். நியமன உறுப்பினர்களை விட தேர்வான உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்ற விதிப்படி இல்லாததால், மேற்கண்ட வாரியத்தை கலைத்து 2019 செப்டம்பர் 18ல் தமிழக அரசு உத்தரவிட்டது. நிதித்துறை செலவின செயலர் சித்திக் வாரிய சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் முத்தவல்லிகள் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்காக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களின் பட்டியலை அனுப்பும்படி மண்டல கண்காணிப்பாளர்களுக்கும், செயல் அதிகாரிகளுக்கும் தலைமை செயல் அதிகாரி தரப்பில் உத்தரவிடப்பட்டது. மேலும் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வக்பு வாரியம் கலைக்கப்பட்ட தமிழக அரசாணையையும், முத்தவல்லிகள் பட்டியலை கேட்பதையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சையது அலி அக்பர் என்ற வக்பு வாரிய உறுப்பினர் வழக்கு தொடர்ந்தார். அதில், வக்பு வாரியத்தை கலைத்தது சட்டவிராதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வக்பு வாரியத்தை கலைத்தது என்பது சட்டவிரோதம் எனக் கூறியதோடு, தமிழக அரசின் உத்தரவு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்றும், வாரியத்தில் இருவரை தவிர்த்து மற்ற உறுப்பினர்களின் பதவியை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள், வக்பு வாரியம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை ரத்து செய்வதாகவும், அதேபோல் இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிற்கு எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புவதாகவும் உத்தரவிட்டனர்.

Related Stories: