மொரீஷியஸ்: மொரீஷியஸ் நாட்டின் கடற்கரையில் மோதி இரண்டாக பிளந்த கப்பலில் இருந்து கசிந்து வரும் கச்சா எண்ணெய்யால் அப்பகுதியில் கடல் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலில் உள்ள அரிய வகை பவளப்பாறைகளுக்கு ஆபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜப்பான் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி. வகாஷியோ என்ற சரக்கு கப்பல் 4,000 டன் கச்சா எண்ணெய்யை ஏற்றி வந்தது.
கடலில் கசியும் எரிபொருளால் மொரீஷியஸ் நாட்டின் கடல்வளம் பாதிக்கப்படும் என அந்நாடு கவலை தெரிவித்திருந்தது. தொடர்ந்து, மொரீஷியஸ் கடற்கரையில் 24 டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதையடுத்து, விபரீதத்தை தாமதமாக உணர்ந்த மொரீஷியஸ் அரசு, உடைந்த கப்பலில் மீதம் இருக்கும் 3,000 டன் கச்சா எண்ணெய்யை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எண்ணெய்யை அகற்றும் பணியில் இயற்கை நல ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய்-யால் அரிய வகை பவளப்பாறைகளுக்கு பேராபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.