தேனி அருகே கோழிக்கடையில் பரபரப்பு தனது இடது கையை வெட்டி துண்டாக்கிய மாஜி ராணுவ வீரர்

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பஸ்நிலையத்தில் உள்ள கோழிக்கறி கடையில், மாஜி ராணுவ வீரர் ஒருவர் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே கே.கே.பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் வெங்கடேசன் (37). மாஜி ராணுவ வீரர். குடும்பத் தகராறில் மனைவியைப் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. நேற்று மதியம் கம்பம் புதிய பஸ் நிலையம் அருகே கோழிக்கறி கடைக்கு டூவீலரில் வெங்கடேசன் வந்துள்ளார். மதிய நேரம் என்பதால் கடையில் கூட்டம் இல்லை. கடைக்குள் நுழைந்த வெங்கடேசன் கண் இமைக்கும் நேரத்தில், அங்கிருந்த இறைச்சி வெட்டும் கத்தியை வலது கையால் எடுத்து, தனது இடது கை மணிக்கட்டில் 4 முறை தானே வெட்டியுள்ளார். இதில், அவரது இடது கை மணிக்கட்டு துண்டானது. இதை எதிர்பார்க்காத கடை ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.

இதையடுத்து துண்டான கையை கடையில் விட்டுவிட்டு, வெங்கடேசன் தனது டூவீலரில் மீண்டும் கே.கே.பட்டிக்கு சென்றுள்ளார். இது குறித்து கடை ஊழியர்கள் கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து சென்று, கடையில் இருந்த கையை எடுத்துக் கொண்டு, சாலையில் டூவீலருடன் நின்றிருந்த வெங்கடேசனை பிடித்து, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், துண்டான கையை குளிர்பதன பெட்டியில் வைத்து, மேல் சிகிச்சைக்காக வெங்கடேசனை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் கையை வெட்டிக் கொண்டதற்கு காரணம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: