கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பஸ்நிலையத்தில் உள்ள கோழிக்கறி கடையில், மாஜி ராணுவ வீரர் ஒருவர் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே கே.கே.பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் வெங்கடேசன் (37). மாஜி ராணுவ வீரர். குடும்பத் தகராறில் மனைவியைப் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. நேற்று மதியம் கம்பம் புதிய பஸ் நிலையம் அருகே கோழிக்கறி கடைக்கு டூவீலரில் வெங்கடேசன் வந்துள்ளார். மதிய நேரம் என்பதால் கடையில் கூட்டம் இல்லை. கடைக்குள் நுழைந்த வெங்கடேசன் கண் இமைக்கும் நேரத்தில், அங்கிருந்த இறைச்சி வெட்டும் கத்தியை வலது கையால் எடுத்து, தனது இடது கை மணிக்கட்டில் 4 முறை தானே வெட்டியுள்ளார். இதில், அவரது இடது கை மணிக்கட்டு துண்டானது. இதை எதிர்பார்க்காத கடை ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.