சென்னை: தமிழ்நாட்டில் அரசு பி.எட். கல்லூரிகளில் விதிகளை மீறி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு கல்லூரிகளின் இணையதளத்தில் பேராசிரியர்கள் தகுதி குறித்து முரண்பாடுகளான தகவல்கள் இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுபற்றி கல்வியாளர் ஒருவர் தெரிவித்ததாவது, பி.எட். கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்ற எம்.எட். மட்டுமின்றி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் பி.எச்.டி. படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.