கொரோனாவில் இருந்து மீண்டவரின் வீட்டுக்கும் தகர தடுப்பு : விளக்கம் கேட்டு பல்லாவரம் நகராட்சிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!

தாம்பரம்: கொரோனாவில் இருந்து முழுவதும் குணமடைந்தவரின் வீட்டுக்கும் நகராட்சி ஊழியர்கள் தகர தடுப்பு அமைத்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  குரோம்பேட்டை அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் ஹேம்குமார் (50). வங்கி ஊழியரான இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 13ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து, அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

ஆனால் அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து யாரும் வெளியே செல்லாதவாறு தகரத்தால் முழுமையாக அடைத்துவிட்டு சென்றனர்.இந்த சம்பவத்தை அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். நகராட்சி அதிகாரிகளின் இந்த அடாவடி செயலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்ததால், ஹேம்குமார் வீட்டிற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் தகரத்தை முழுமையாக அப்புறப்படுத்தி சென்றனர்.

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தி அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அதன்படி, கொரோனாவில் இருந்து முழுவதும் குணமடைந்தவரின் வீட்டுக்கும் நகராட்சி ஊழியர்கள் தகர தடுப்பு அமைத்த சம்பவம் குறித்து பல்லாவரம் நகராட்சிக்கு விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த 2 வாரங்களுக்குள் விளக்கம் தர சுகாதாரத்துறை செயலர், நகராட்சி நிர்வாக ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: