நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிழ்கிறது : போதை பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கு தொடர்பு

மும்பை:  நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் போதை கும்பலுடன் தொடர்பிருப்பதாக கூறி, நடிகை ரியா, அவரது சகோதரர் மற்றும் 2 பேர் மீது போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. மும்பை போலீஸ் தொடங்கி அமலாக்கத்துறை, சி.பி.ஐ என்ற நீண்ட விசாரணை வளையத்திற்குள் தற்போது போதைப் பொருள் தடுப்பு துறையும் இணைந்துள்ளது.

கடந்த ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும்,

 மன அழுத்தம், வாரீசு நடிகர்களின் ஆதிக்கம் மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகியவையே காரணமாக கூறப்பட்டது. அதன் பின்னர் சில நாட்களில் அவை தற்கொலை அல்ல கொலை என குற்றம் சாட்டப்பட்டது. அதாவது காதலியும் நடிகையுமான ரியா பல கோடி ரூபாயை சுஷாந்த்திடமிருந்து பறித்துக்கொண்டதாக அவரது தந்தை குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து பண மோசடி தொடர்பாக ரியாவின் வாட்ஸ் ஆப் உரையாடல்களை அமலாக்கத்துறை கைப்பற்றி விசாரித்தபோது, அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் ரியா பேசிய உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஒரு உரையாடலில் ஜெய ஷகா என்ற பெண், ரியாவிடம் ஒரு பொருளின் பெயரை குறிப்பிட்டு, அதனை 4 நோட்டுகள் குடிக்கவைத்தால் எல்லாம் முடிந்துவிடும் என கூறியுள்ளார். இந்த உரையாடல் கடந்தாண்டு நவம்பரில் நடந்தாலும் அப்போது ரியா, சுஷாந்த் இருவரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். இந்நிலையில் போதைப் பொருள் பதுக்கல், பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நடிகை ரியா, அவரது சகோதரர் மற்றும் 2 பேர் மீதும் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் சுஷாந்த் மன அழுத்தத்திற்கு எடுத்துக்கொண்ட மருந்துகள் ரியா கொடுத்த போதைப் பொருட்களாகத்தான் இருக்குமென்று அவரது தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ரியா ஒருபோதும் போதை பொருள் உட்கொண்டதில்லை என்று அவரது வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார். ஒவ்வொரு நாளும் பல கோணங்களில் நீளும் சுஷாந்த் சிங் மரண வழக்கில் உரிய நீதி கிடைக்கவேண்டுமென்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Related Stories: