நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினித் ஜோஷி தகவல்

டெல்லி: நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினித் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார். தேர்வு எழுத வருவதற்கு மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு மையங்கள் தயாராக உள்ளன எனவும் கூறினார். இந்நிலையில் நீட் - ஜே.இ.இ., தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தேசிய தேர்வுகள் முகமை நேற்று வெளியிட்டது. திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர், 1 மற்றும் 6ம் தேதிகளில் ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வும், செப். 27ல், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வும், செப். 13ல், நீட் தேர்வும் நடத்தப்படும் என தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது. இதனால், தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என மாணவர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவும கடந்த வாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

நீட் - ஜே.இ.இ., தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:

* தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும், கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும்.

* வீட்டில் இருந்தே, குடிநீர் பாட்டில், சானிடைசர் ஆகியவை எடுத்து வர வேண்டும்.

* மாணவர்கள் தேர்வு மையத்தை அடைந்ததும், முக கவசத்தை கழற்றிவிட்டு, தேர்வு மையத்தில் தரப்படும், புதிய முக கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

* தேர்வு மையத்திற்குள், தண்ணீர் பாட்டில், சானிடைசர் மற்றும் அட்மிட் கார்டு எனப்படும் அனுமதி சீட்டு தவிர, வேறெதுவும் அனுமதிக்கப்படாது.

* தேர்வு எழுதும் போது, முக கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை.தேர்வு மைய வாயிலில், கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களின் வருகைக்கான நேரம், முன்பே தெரிவிக்கப்படும்.

* மாணவர்கள் தங்களுக்குள் குறைந்தபட்சம், 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

* உடல் வெப்பநிலை, 99.4 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள், தனி அறைக்கு அழைத்து செல்லப்படுவர்.

* அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின், மீண்டும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படும்.

Related Stories: