புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி குப்புசாமி அண்ணாமலை பாஜ கட்சியில் இணைந்தார். தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கர்நாடகாவில் பணியாற்றினார். இவர் கடந்த ஆண்டு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து, மக்கள் நலப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். விரைவில் இவர் அரசியலில் நுழைய இருப்பதாக கர்நாடகா போலீஸ் துறையில் பேசப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் நேற்று பாஜ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் உடனிருந்தார். பின்னர், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அண்ணாமலை வாழ்த்து பெற்றார். அவர் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் தேசிய உணர்வை வளர்க்கவும், பாஜவை வலுப்படுத்தவும் பணியாற்றுவேன்’’ என்றார்.