இஸ்ரேலில் 16 வயது சிறுமி 30 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்!: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி மக்கள் போராட்டம்..!!

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் 16 வயது சிறுமி ஒருவர் 30 பேரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கக்கோரி அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. இஸ்ரேலில் தெற்கு பகுதியில் இருக்கும் ஈலத் நகரத்தில் கடந்த வாரம் விடுமுறையை செலவிட வந்திருந்த 16 வயது சிறுமி தான் 30க்கும் மேற்பட்ட இளைஞர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் ஜெருசேலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அதிகபட்ச தண்டனை அளிக்க வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்ததாவது, ஈலத் நகர ஓட்டலில் 30 ஆண்கள் சேர்ந்து ஒரு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். நாட்டில் பலாத்கார நிகழ்வுகள் அதிகரித்துவிட்டதை எதிர்த்து போராடி வருகிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அனைவருக்கும் உரிய தண்டனை அளிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க, மாணவர்களுக்கு பள்ளிகளில் போதனை முறைகள் மாற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டார். நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இஸ்ரேல் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்ந்து, தீவிர விசாரணையில் இறங்கிய இஸ்ரேல் காவல்துறை அதிகாரிகள், சிறுமி பாலியல் வன்முறை தொடர்பாக 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் என்றும், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: