பூவிருந்தவல்லி அருகே பெண் மீது தாக்குதல்...சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதால் அத்துமீறல்!

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே உணவகம் ஒன்றில் சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதால் பெண் ஒருவரை சிலர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊரடங்கு காலத்தில் அனைத்து மக்களும் பொருளாதாரரீதியாக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு இன்னல்களுக்கிடையில் உணவகங்களை நடத்தி வரும் சில உரிமையாளர்களின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அதாவது  திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதால், சில இளைஞர்கள் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

செம்பரப்பக்கம் பகுதியில் குமாரி என்பவர் சிறிய உணவகம் ஒன்றினை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடைக்கு வரும் அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் உணவுகளை சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடைக்குள் சென்று குமாரியின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்துள்ளனர். இதனையடுத்து இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது காண்போரிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த நஷ்ரத் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: