திருப்போரூர் அருகே பரபரப்பு கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு சரமாரி வெட்டு: காதலி கைது கணவனுக்கு வலை

திருப்போரூர்: திருப்போரூர் - கூடுவாஞ்சேரி சாலையில் குமிழி ஊராட்சி, அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகி (எ) மகேந்திரன் (32). இவரது மனைவி மாலா. சென்னை கண்ணகி நகரில் மற்றொரு ஒரு மனைவி இருக்கிறார். இதனால் மகேந்திரன், பல நேரங்களில் அங்கும் சென்று வருவது வழக்கம். இதற்கிடையில், மகேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில், அதே தெருவை சேர்ந்த முனுசாமி (28) என்பவரோடு மாலாவுக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மகேந்திரனுக்கு தெரிந்ததும், முனுசாமியை, அவர் கண்டித்துள்ளார். ஆனால், மகேந்திரனுக்கு தெரியாமல் முனுசாமியும், மாலாவும் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மகேந்திரன், அஸ்தினாபுரத்துக்கு தனது நண்பர்களுடன் வந்தார். அப்போது, மது அருந்தலாம் என கூறி முனுசாமியை அழைத்துள்ளார். அவருடன் முனுசாமியும் சென்றார். பின்னர் 4 பேரும், அங்குள்ள மதில்சுவர் போடப்பட்ட வயல் பகுதியின் உள்ளே சென்று மது அருந்தினர். போதை ஏறியதும் மகேந்திரன், தனது மனைவியுடன் உள்ள தொடர்பு பற்றி பேசினார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன் மற்றும் 2 பேர், மறைத்து வைத்திருந்த கத்தியால், முனுசாமியை சரமாரியாக வெட்டினர். இதில் உடல் முழுவதும் படுகாயமடைந்த முனுசாமி மயங்கி விழுந்தார்.

இதில், முனுசாமி இறந்து விட்டதாக கருதி 3 பேரும், தப்பி விட்டனர். அந்த நேரத்தில், அவ்வழியாக சென்ற பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த முனுசாமியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, காயார் எஸ்ஐ சுசீலா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முனுசாமியிடம் வாக்குமூலம் பெற்று, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மகேந்திரன் மனைவி மாலா, மேகநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மகேந்திரன் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: