மேட்டூர்: மேட்டூர் அருகே அனுமதி அளிக்கப்பட்ட நேரம் கடந்து விட்டதாக கூறி, பெட்டிக்கடையை போலீசார் மூட சொன்னதால், ஆத்திரமடைந்த வியாபாரி ரகளை செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதிலும் ஒவ்வொரு ஞயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மீன், இறைச்சி சந்தைகளை திறந்து வைத்தும், மேலும் பல்வேறு கடைகளை திறந்து வைத்தும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மேட்டூரில் ஒரு வியாபாரி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக கடையை திறந்து வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அதாவது மேட்டூரில் ஊரடங்கு காரணமாக கொளத்தூர் ஆய்வாளர் கடைவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் பெட்டிக்கடை ஒன்று திறந்திருந்தால், காவல் ஆய்வாளர் அதன் உரிமையாளரிடம் கடையை மூடுமாறு எச்சரித்துள்ளார். இதனால் கொதித்தெழுந்த வியாபாரி சட்டையை கழற்றிக்கொண்டு, கத்தி தீர்த்துவிட்டார். மேலும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்களும் அவரை சமாதானம் செய்துள்ளனர். இருப்பினும் அவர் அடங்காமல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி சத்தமிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட வியாபாரி மணிவண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு நிலவியது.