லக்னோ: விடா முயற்சி மற்றும் திறமையால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்த உத்திரபிரதேச மாநில மாணவி ஈவ் டீசிங்கிற்கு இறையாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் கவும்தம்புத்நகர் மாவட்டம் தாத்ரி என்ற பகுதியை சேர்ந்தவர் சுதிக்க்ஷா. தேநீர் விற்பனையாளரின் மகளான இவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பாப்சன் பல்கலைக் கழகத்தில் 4 கோடி ரூபாய் காலர்ஷிப்புடன் கல்வி பயில சுதிக்க்ஷா தேர்வானார்.
கொரோனா பரவலால் சொந்த ஊர் திரும்பிய சுதிக்க்ஷா, உறவினர் வீட்டிற்கு சென்ற போது இளைஞர்களின் கேலி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். சுதிக்க்ஷா சென்ற வாகனத்தை இடைமறித்து இளைஞர்கள் தகராறு செய்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் சாலையில் விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார். விபத்து குறித்து உத்திரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுதிக்க்ஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே இந்த சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களால் உ.பி-யின் பெண்களால் எப்படி முன்னேற முடியும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சுதிக்ஷா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உத்திரபிரதேச அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாயாவதி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.