லக்னோ: ‘நான் ஒரு சாமியார்; ஒரு இந்துவும் கூட. அப்படி இருக்கும்போது, மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்கு எப்படி செல்ல முடியும்?’ என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த புதன்கிழமை கோலாகலமாக நடந்தது. இதைத் தொடர்ந்து, புதிதாக பாபர் மசூதி கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை சன்னி வக்பு வாரியம் தொடங்கி இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை தனியார் டிவி சேனலுக்கு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி அளித்தார். அப்போது, ‘புதிய பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வீர்களா?’ என கேட்கப்பட்டது.