வரும் 12 முதல் ஆன்லைன் வகுப்புகள்: அக்டோபர் 28-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்...அண்ணா பல்கலை. அறிவிப்பு.!!!

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளன.  கல்லூரிகளை பொறுத்தவரை, இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு அடுத்த பருவம் தொடங்கும்போது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வு தவிர மற்ற தேர்வுகளையும், செமஸ்டர் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஊரடங்கு காரணமாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வழக்கமாக மார்ச், ஏப்ரல்  மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் பொறியியல் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 26-ம்  தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த செமஸ்டருக்கான ஆன்லைன் வகுப்புகள் டிசம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கும். அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 28-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: