திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (82). இவர் தமிழ்நாடு கல்வி துறை இயக்குநராக பணியாற்றி கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை, பெங்களூரு மற்றும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இவரது மனைவி ராஜேஸ்வரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பாலகிருஷ்ணன் மட்டும் வீட்டில் உதவியாளராக ஒருவரை வைத்து வசித்து வந்துள்ளார். மேலும் இவரது பெயரில் திருப்பத்தூரில் அதிகளவில் சொத்துக்கள் உள்ளது. நேற்று மாலை அப்பகுதி வழியாக சென்றவர்கள் பாலகிருஷ்ணன் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது சரமாரியாக வெட்டி பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீடு முழுவதும் மிளகாய் பொடி தெளிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்பி விஜயகுமார் வந்து விசாரணை நடத்தினார். திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.