பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

சென்னை:  பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முட்டை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழத்தில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சத்துணவு மற்றும் முட்டையானது வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.சுதா பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் கொரோனா காரணமாக பள்ளி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறை வாய்ப்புள்ளது.

இதனால் பள்ளி குழந்தைகளுக்கு முட்டை, வைட்டமின் மாத்திரைகள், நாப்கின் மற்றும் சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கானது தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனைத்து குழந்தைகளுக்கும் முட்டை வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது, மேலும் ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒரே விதமாக வழங்க முடியாது என வாதிட்டுள்ளார். இதனையடுத்து தமிழக அரசு முட்டை வழங்குவதில் சிரமம் இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது. அதாவது வாரத்தில் ஒருமுறையோ அல்லது மாதத்தில் கடைசி நாட்களிலோ என அரசே பிரித்து பள்ளி குழந்தைகளுக்கு முட்டைகள் மற்றும் நாப்கினை வழங்க வேண்டும். இதில் எந்தவித சிரமமும் இல்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு சத்துணவு மையங்கள் மூலமாக அனைத்து குழந்தைகளுக்கும் முட்டை, நாப்கினை வழங்க வேண்டும். மேலும் இதனை விநியோகிக்கும்போது குழந்தைகள்தான் வரவேண்டும் என்ற எந்தவித கட்டாயமும் இல்லை. அவர்களுடைய பெற்றோர்களே வந்து பெற்று கொள்ளலாம் என கூறி உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: