சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் உள்ள மானகிரி இல்லத்தில் நான் நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு களப்பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளும் தப்பவில்லை. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
மேலும், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்திருந்தார். கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து கார்த்தி சிதம்பரம் பல மாவட்டங்களுக்கும் சென்று நிவாரண உதவிகளை வழங்கிவந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும், கார்த்தி சிதம்பரத்தின் தந்தையுமான ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார். நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி, என கூறியுள்ளார்.