பொள்ளாச்சி: பொள்ளாச்சி வரகளியாறு முகாமில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா யானை, பாகன்களின் பயிற்சிக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காட்டு யானை ஒன்று, அங்கிருந்து இடம்பெயர்ந்து அர்த்தனாரிபாளையம், ஆண்டியூர் கிராம பகுதியில் நுழைந்தது. அந்த யானை அப்பகுதியில் தினமும் தோட்டத்து வீடுகளை சேதப்படுத்தியது. நவமலை, சேத்துமடை, அர்த்தனாரிபாளையம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து 4 பேரை கொன்றது. பொதுமக்கள் போராட்டம் மற்றும் புகாரையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி இரவு அரிசி ராஜா என்று அழைக்கப்பட்ட இந்த காட்டு யானையை ஆண்டியூரில் உள்ள ஒரு தோட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.