தொற்று அதிகரிக்கும் என அச்சம் மால், ஜிம்களை திறக்க 72% பேர் எதிர்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்

கொல்கத்தா: கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் மால்கள், ஜிம்கள், சர்வதேச விமான சேவைகளை தொடங்குவதற்கு 72 சதவீத இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவுவது அதிகரித்து வருகின்றது. வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது. நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும், மால்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டு கிடக்கின்றன. தற்போது அமலில் உள்ள 6ம் கட்ட ஊரடங்கு, நாளை மறுதினம் முடிகிறது. அதன் பிறகான ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நேற்று மாலை மத்திய அறிவித்த தளர்வுகளில் யோகா மையங்கள், உடற்பயிற்சி மையங்களை (ஜிம்) திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், சமூக ஊடகங்கள் அடிப்படையில் கருத்து கணிப்பு நடத்தும் நிறுவனம் ஒன்று, மால்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் திறப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 255 மாவட்டங்களில் 34 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், 72 சதவீதம் பேர் தற்போது நாட்டில் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறப்பதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். மெட்ரோ உள்ளூர் ரயில் சேவை தொடங்குவது பற்றி கருத்து கேட்கப்பட்டதில் 63 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 29 சதவீதம் பேர் உள்ளூர் ரயில் சேவையை தொடங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விமான சேவை தொடங்குவதற்கு 62% பேர் எதிராகவும், 31 சதவீதம் பேர் ஆதரவாகவும் கருத்து கூறியுள்ளனர்.

Related Stories: