விவசாயி அணைக்கரை முத்துவின் உடற்கூறு ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்: விவசாயி உடலில் 4 இடங்களில் காயம் இருந்ததாக தகவல்

மதுரை: தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத முத்துவின் குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் அவரை தாக்கியதால் தான் உயிரிழந்ததாக புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில், உயிரிழந்த விவசாயியின் உடலை, மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட  கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விவசாயியின் மனைவி பாலம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், தமது கணவர் இறப்புக்கு காரணமான வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் நிலை அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவை சீலிட்டி கவரில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் விசாரணையில் முத்துவின் உடலில் 18 காயங்கள் இருந்ததாக கூறப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடற்கூராய்வு அறிக்கையில் 4 இடங்களில் மட்டுமே காயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாளை இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: