கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து தேர்ச்சி மதிப்பெண்கள் எப்படி கணக்கிடப்படும்: தமிழக அரசு அரசாணை

சென்னை: தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில்  கூறியிருப்பதாவது:

கொரோனா  காரணமாக தமிழகத்தில் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்து கடந்த 23ம் தேதி முதல்வர் அறிவித்தார். இதன்படி, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது. இந்நிலையில், கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.

* சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அக மதிப்பீடு அல்லது தொடர்ச்சியான அகமதிப்பீட்டில் இருந்து 70 சதவீத மதிப்பெண் கணக்கில் எடுத்து 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மை பாடங்களுக்கும், மொழிப்பாடங்களுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

* துணைப்பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கு 100% அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்அளிக்கப்படும்.

* செயல்முறை தேர்வு நடத்தாமல் இருந்தால், ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.

* மாணவர்கள் இதற்கு முந்தைய பருவத்தில்தேர்ச்சி பெறாமல் இருந்தால் அந்த தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்.

* தொலை தூரக் கல்வியை பொறுத்தவரையில் மேற்கண்ட நடைமுறை பின்பற்றப்படும்.

* தொலை தூரக் கல்வியில் எங்கெல்லாம் அக மதிப்பீடு இல்லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.

* இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்கு பெற்று மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம்.

* கொரோனா சூழ்நிலை கருதி மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.

Related Stories: