இந்திப்பட வாய்ப்புகளை ஒரு கும்பல் தடுப்பதாக ரகுமான் கூறிய குற்றச்சாட்டு உண்மைதான்: ஏ.ஆர். ரகுமானுக்கு வைரமுத்து ஆதரவு..!!

சென்னை: இந்தி திரையுலகில் தமது பட வாய்ப்புகளை ஒரு கும்பல்  தடுப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறிய குற்றச்சாட்டு உண்மைதான் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி திரைப்பட உலகை ஆதிக்க சக்திகள் ஆட்டி படைப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்துவது போல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனக்கு வரவேண்டிய இந்தி சினிமா வாய்ப்புகள் தடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். திட்டமிட்டு ஒரு கும்பல் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமான் கூறிய குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக நடக்கும் உண்மை என்று வைரமுத்து கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அன்பு ரகுமான்! அஞ்சற்க, வடஇந்திய கலையுலகம் தமிழ்நாட்டு பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான், அதிலும் அரியவகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். கவிஞர் வைரமுத்து மட்டுமின்றி பல்வேறு திரையுலக பிரபலங்களும் ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தி திரையுலகில் குறிப்பிட்ட கும்பலின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

Related Stories: