புதுச்சேரி: புதுச்சேரி அருகே மணல் திருட்டை தடுக்க சென்ற போலீசார் மீது வாகனம் ஏற்றி தப்பிச்சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள சங்கராபரணி ஆற்றில் சிலர் மணல் திருடுவதாக திருக்கனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் காவலர் ராஜராஜன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். அப்போது மணல் திருடிவிட்டு வேகமாக சென்ற மினி லாரியை போலீசார் தடுத்துள்ளனர். அப்போது, போலீசார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு காலிலும், காவலர் ராஜராஜனுக்கு கையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.