அரசு கட்டியதாக கூறிய 140 வீடுகளை காணோம்!: வடிவேல் காமெடியை நினைவுபடுத்தும் மோசடி..மன்னார்குடி அருகே கிராமமக்கள் புகார்..!!

திருவாரூர்: மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலையாமங்கலம் ஊராட்சியில் 140 பேருக்கு வீடுகளை கட்டி தாராமலேயே வீடுக்கட்டிவிட்டதாக கணக்குக்காட்டி பலகோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ், தலையாமங்கலம் ஊராட்சியில் 725 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 140 பேருக்கு வீடுகள் கட்டித்தரப்படவில்லை என்பது புகார். அதேசமயம் 140 பேருக்கும் தலா 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்  மானியம் வழங்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுவிட்டதாக அரசு பதிவேட்டில் பதிவாகியிருக்கிறது.

4 தவணைகளாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவிட்டதாகவும், அலுவலர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வடிவேல் பாணியில், கட்டப்பட்ட வீட்டை காணோம் என புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து வீடுகள் மட்டுமல்ல கழிவறைகளையும் காணோம் என்று புகார் எழுந்திருக்கிறது. தலா 12 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கட்டப்படும் கழிவறைகள் 170 வீடுகளுக்கு கட்டப்பட்டுள்ளதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மற்ற 50 ஊராட்சிகளிலும் வீட்டை காணோம் என்று எத்தனை பேர் வருவார்களோ என்பது தெரியவில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, தலையாமங்கலம் ஊராட்சியில் 3 கோடிக்கு மேலாக பண மோசடி நடைபெற்றுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு உரிய பயன் அடையுமாறு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தனர்.

Related Stories: