உசிலம்பட்டி: தினகரன் செய்தி எதிரொலியால் எழுமலையில் சுற்றுச்சுவர் இல்லாமல் தரைமட்டமாக பல ஆண்டுகளாக கிடந்த கிணற்றை சுற்றி தற்போது தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், எழுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் காச்சகாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் அதிகமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த தெருவில் பல ஆண்டுகளுக்கும் மேலாக தெருவின் அளவிற்கு தரைமட்டமாக கிணறு இருந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் டூவீலர்கள் மற்றும் கார்கள், பொதுமக்கள் இந்த கிணற்றில் தவறி விழுந்து விடுவோமோ என உயிர் பயத்தில் அப்பகுதியை கடந்து வந்தனர்.