மதுரை: கொலை வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் சாத்தான்குளம் போலீசார் தாக்கியதால் மரணமடைந்தார் என கூறப்படும் வழக்கையும், சிபிசிஐடிக்கு மாற்ற உள்ளதாக அரசுத் தரப்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த வடிவு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மூத்த மகன் துரையை ஒரு கொலை வழக்கு விசாரணைக்காக தேடி வந்து, அவருக்கு பதிலாக 2வது மகன் மகேந்திரனை இழுத்து சென்றுள்ளனர். காவல்நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர், மகேந்திரனை தலை, உடல் முழுவதும் பலமாக தாக்கியுள்ளனர். மே 24ம் தேதி இரவு மகேந்திரன் காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது, போலீசார், உயரதிகாரிகளிடம் எவ்வித புகாரும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியுள்ளனர். போலீசார் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.