வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் மற்றும் விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களால் விபத்து அபயாம் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் வாடிப்பட்டி மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உயிரோடு விளையாடி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே தனியார் பள்ளிகள், கல்லூரி மற்றும் தங்கும் விடுதிகள், இறைவாக்கு இல்லம் உள்ளிட்டவை செயல்பட்டு வரும் பகுதியில் மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளன. இந்த மின்கம்பத்திலிருந்து செல்லும் உயரழுத்த மின்கம்பிகள், தொட்டுவிடும் தூரத்தில் தாழ்வாக செல்கின்றன. சாய்ந்துவிழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற கோரி இப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.