உடுமலை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டதால் திருமூர்த்திமலை நேற்று வெறிச்சோடியது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. பவுர்ணமி, அமாவாசை தினங்களிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் இங்கு அதிகளவில் வருவார்கள். பஞ்சலிங்க அருவியில் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
குறிப்பாக, தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பழனி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் விவசாயிகள் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டியில் திருமூர்த்திமலைக்கு வந்து, திருமூர்த்தி அணையின் கரையோரம் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்வார்கள்.