சொத்துக்காக 90 வயது முதியவரை கொலை செய்த மகன், மருமகள் கைது...! அரியலூரில் பரபரப்பு!!!

அரியலூர்:  அரியலூர் மாவட்டம் சுந்தரேசபுரத்தில் 90 வயது முதியவரை அவரது மகன் மற்றும் மருமகள் வெட்டி கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் சுந்தரேசபுரம் கிராமத்தில் தனது குடும்பங்களுடன் சாமிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள், 4 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இந்நிலையில், சாமிதுரைக்கு சுமார் 5 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அதில் 2 ஏக்கரை 2வது மனைவியின் மகனான தங்கமணி பேரில் சாமிதுரை எழுதிவைத்துள்ளார்.

இதனால் 2 மனைவியின் பிள்ளைகளுக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2வது மனைவியின் மகன் பேரில் 2 ஏக்கர் நிலம் எழுதிவைத்ததை எதிர்த்து முதல் மனைவியின் பிள்ளைகள் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளனர். இதனால், குடும்பத்தில் தொடர்ந்து பல பிரச்சனைகள் நிலவி வந்ததால், சொத்தை 3 பாகமாக பிரிக்க சாமிதுரை முடிவு செய்துள்ளார். அதனை ஏற்றுக்கொள்ளாத தங்கமணி மொத்த சொத்துகளையும் தானே அடைய வேண்டும் என்பதற்காக தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து,  தனது மனைவி சாந்தியுடன் இணைந்து பெற்ற தந்தை எனவும் பாராமல், சாமிதுரையை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மகன் மற்றும் மருமகள் இருவரையும் கைது செய்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 90 வயது தந்தையை மனைவியுடன் இணைந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: