கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விவசாயி பலி!!!

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அங்கனூர் கிராமத்தில் சாமிதுரை (விவசாயி) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் இன்று குமாரமங்கலம் அருகே தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தனது பாதுகாப்பு வாகனத்தில் அவ்வழியே சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அமைச்சரின் பாதுகாப்பு வாகனமானது அருகில் சென்றுகொண்டிருந்த விவசாயியின் சைக்கிளின் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட விவசாயி சாமிதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகளவில் கூடியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர், விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் பாதுகாப்பு வானகம் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: