சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தடையை மீறி கால்நடைகளை விற்பனை செய்ய வியாபாரிகள் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மதுரை சுற்றுவட்டார பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனால் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காய்கறி சந்தைகள் மற்றும் கால்நடை சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை மீறி ஆடு, கோழிகளை விற்பனை செய்ய சந்தையில் வியாபாரிகள் குவிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, ஆடு, கோழிகளை வாங்க சுற்றுவட்டார கிராம மக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால், கொரோனா தொற்றானது அதிகளவு பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று அச்சத்தால் ஆடுகள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.
இதனால் 4 ஆயிரத்துக்கு விற்பனையாகும் ஆடுகள், தற்போது கொரோனா பாதிப்பால் விலைவாசி உயர்ந்து 7ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கொரோனா காலத்திலும் தொற்றை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் விற்பனை செய்வதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால்,, சந்தைகளில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.